*மார்ச் 18 ஞாயிறு 2019*
*பிரியமானதை!*
" *அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப் பண்ணும். உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்" (சங். 143:8,10).*
*அதிகாலையிலே கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்திருப்பது, தாவீதுக்குப் பிரியமாயிருந்தது. தேவனைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற வாஞ்சை அவருக்கு இருந்ததினாலே, தினந்தோறும் அதிகாலையிலே தேவ சமுகத்துக்கு வந்து, "ஆண்டவரே, உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்" என்று ஜெபித்தார்.*
*தேவனைப் பிரியப்படுத்த உங்கள் சுயபெலத்தினாலோ, சுயநீதியினாலோ, சுய முயற்சியினாலோ முடியாது. ஒவ்வொருநாளும் அதிகாலை வேளையில் தேவ சமுகத்தில் வந்து, "ஆண்டவரே, எனக்குப் போதியும்" என்று கேட்கும் போது, கர்த்தர் உங்களுக்கு அப்படியே செய்வார். ஆம், கர்த்தர் உங்களுக்குப் போதிப்பாரென்றால், நிச்சயமாகவே அவருடைய வழிகளில் நீங்கள் நடந்து, அவருக்குப் பிரியமானதைச் செய்வீர்கள்.*
*நீங்கள் கர்த்தரோடு உறவாட, அதிகாலை நேரம் மிகுந்த இன்பமான, இனிமையான நேரமாகும். நீங்கள் தேவனோடு உறவாடுவதும், அவர் உங்களோடு பேசுவதும், அந்த நாள் முழுவதற்குமான கர்த்தருடைய சித்தம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதும், போதிக்கப்படுவதும் எத்தனை மகிமையான அனுபவங்கள்!*
*ஆதாமும், ஏவாளும், "பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்" என்று ஆதி. 3:8-ல் வாசிக்கிறோம். அமைதியான அதிகாலை வேளையில், தேவ சத்தத்தை நீங்கள் தெளிவாகக் கேட்டு மகிழ முடியும். பகல் நேரங்களில், உலகக் காரியங்களும், உலகக் கவலைகளும் உங்களை நெருக்கிப் போடக்கூடும். ஆகவே, கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்ய கர்த்தர் உங்களுக்குப் போதிக்கும்படி, அதிகாலை நேரத்தை கர்த்தருக்கென்று ஒதுக்குங்கள்.*
" *நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்" (சங். 17:15) என்று தாவீது சொல்லுகிறார். தாவீது மட்டுமல்ல, தேவனுடைய அனைத்து பரிசுத்தவான்களும், அதிகாலை எழும்பி தேவனோடு உறவாடி, அவருடைய மெல்லிய சத்தத்தைக் கேட்பதில் பழக்கப்பட்டிருந்தார்கள். "ஆபிரகாம் அதிகாலை எழுந்து" என்று ஆதி. 22:3-லே வாசிக்கிறோம். யோபு அதிகாலைமே எழுந்து, தேவ சமுகத்தில் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார் என்று யோபு 1:5 -ல் வாசிக்கிறோம்.*
*இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கையைப் பாருங்கள். அவர், "அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம் பண்ணினார்" (மாற். 1:35). அப்போஸ்தலர்கள் காலத்தில் அவர்கள் எல்லாரும், அதிகாலமே தேவாலயத்தில் போதகம் பண்ணினார்கள் (அப். 5:21).*
*தேவபிள்ளைகளே, அதிகாலையில் எழுந்து ஜெபிப்பதையும், தியானிப்பதையும், கர்த்தரோடு உறவாடுவதையும் உங்கள் வாழ்க்கையில் அனுபவங்களாக்கிக் கொள்ளுங்கள். அதிகாலையில் எழும்பி முழு இருதயத்தோடும், முழு பெலத் தோடும் கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கும்போது, துதியில் பிரியப்படுகிற கர்த்தர் உங்களுக்குத் தமது வழியைப் போதிப்பார். "வழி இதுவே, இதிலே நடவுங்கள்" என்று சொல்லுகிற சத்தத்தை, நிச்சயமாகவே உங்கள் காதுகள் கேட்கும்.*
நினைவிற்கு:- " *நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின் மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?" (ஏசா. 48:14).*
*சகோ. ஜே. சாம் ஜெபத்துரை*
No comments:
Post a Comment